" |
|
|
||||||||||||||||||||||||||||
ஆண்டவரின்
விண்ணேற்றம் பெருவிழா |
|||||||||||||||||||||||||||||
முதல் வாசகம் எங்கள் கண்கள் முன்பாக, இயேசு மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 1-11 தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்துகொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன். இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப்பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார். அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், “நீங்கள் எருசலேமை விட்டு நீங்க வேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்” என்று கூறினார். பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், “ஆண்டவரே, இஸ்ரயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத் தரும் காலம் இதுதானோ?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்துவைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார். இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும்போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்” என்றனர். ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 47: 1-2. 5-6. 7-8 (பல்லவி: 5b) பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். அல்லது: அல்லேலூயா.
1
மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்;
ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
2
ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு
உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர்
அவரே. - பல்லவி
5
ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்;
எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
6
பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்;
பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்.
- பல்லவி
7
ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்;
அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள்.
8
கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி
செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில்
வீற்றிருக்கின்றார். -
பல்லவி
இரண்டாம் வாசகம் அவரை விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்த்தினார். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-23 சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்ப வர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப்பெறுவனவாக! கடவுள் வலிமைமிக்க தம் ஆற்றலைக் கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்த்தினார். அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்; இவ்வுலகில் மட்டும் அல்ல; வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச் செய்து, அனைத்துக்கும் மேலாக அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது. ஆண்டவரின் அருள்வாக்கு. நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 28: 19-20அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. நற்செய்தி வாசகம் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20 அக்காலத்தில் பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார். ஆண்டவரின் அருள்வாக்கு.
|
|||||||||||||||||||||||||||||
ஆண்டவருடைய விண்ணேற்றம் (திப 1: 1-11, எபே 1: 17-23, மத் 28: 16-20) கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள்! கற்பித்தல் செய்த மாற்றம்! ஒரு நகரில் இருந்த ஒரு பிரபல பள்ளியில் வகுப்புக்கு வரமுடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவர்கள் பாடத்தைத் தவறவிட்டுவிடக் கூடாது என்பதற்காக வகுப்பு ஆசிரியரே மருத்துவமனைக்குச் சென்று, மாணவருக்குப் பாடம் நடத்தும் வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டிருந்தது. ஒரு மாணவன் ஒருவார காலமாகப் பள்ளிக்கு வராததை அறிந்த பள்ளி நிர்வாகம், அவனுடைய வகுப்பு ஆசிரியரை அழைத்து, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. ஆசிரியர் அவனிடம் சென்றபோதுதான் தெரிந்தது, அவனுடைய உடலின் பெரும்பாலான பகுதிகளில் தீக்காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பது. ஆசிரியர் அவனிடம் கரிசனையோடு பேசிவிட்டு, நடத்தவேண்டிய பாடங்களை ஓரளவு நடத்திவிட்டு வந்தார். ஆசிரியர் மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்த மறுநாள் அங்கிருந்த ஒரு செவிலியரிடமிருந்து அவருக்கு ஓர் அழைப்பு வந்தது. அதை எடுத்து, ஆசிரியர் தம் காதில் வைத்தபோது, மறுமுனையில் இருந்த செவிலியர், “நேற்று நீங்கள் அந்த மாணவனுக்கு என்ன கற்றுக் கொடுத்தீர்கள்?” என்று கேட்டார். “எல்லாருக்கும் கற்றுத் தந்த பாடத்தைத் தான் நான் அவனுக்கும் கற்றுத்தந்தேன்” என்று ஆசிரியர் சொன்னபோது, செவிலியர் மறுமொழியாக, “நீங்கள் அவனுக்கு எல்லாருக்கும் கற்றுத்தந்த பாடத்தையே கற்றுத் தந்திருந்தாலும், நீங்கள் கற்றுத்தந்த விதம், அவனுடைய உடல் நலனில் பெரிய முன்னேற்றத்தைக் காண வைத்திருக்கின்றது. ஏனெனில், அவன், ‘நான் இறந்து போய்விடுவேனோ’ என்ன அச்சத்தில் இருந்தான். இப்போது அவன், ‘நான் பிழித்துக் கொள்வேன்’ என்ற நம்பிக்கையோடு இருக்கின்றான்” என்றார். கற்றுத் தருவது, அதுவும் அன்போடு கற்றுத் தருவது ஒருவருடைய வாழ்வில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்பதை இந்த நிகழ்வின் வாயிலாக நாம் அறிந்துகொள்ளலாம். ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, “கடைப்பிடிக்குமாறு கற்பியுங்கள்” என்ற சிந்தனையைத் தருகின்றது. விண்ணேற்றம் அடைந்த இயேசு நமக்குத் தரும் செய்தியை, நமது வாழ்வில் நாம் எப்படி கடைப்பிடிப்பது வாழ்வது என்பது பற்றி நாம் சிந்திப்போம். கற்றுத் தரும் இயேசு இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின் உடனே விண்ணேற்றம் அடையவில்லை. மாறாக, அவர் தம் சீடர்களுக்குப் பலவற்றைப் பற்றிக் கற்பித்த பின்னே, விண்ணேற்றம் அடைந்தார். இன்றைய முதல் வாசகத்தில், “இயேசு துன்புற்று இறந்த பின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்” என்று வாசிக்கின்றோம். இயேசு இறையாட்சியைப் பற்றித் தம் சீடருக்குக் கற்பித்தார் என்பதிலிருந்து இரண்டு செய்திகளை அறிந்துகொள்ளலாம். ஒன்று, இயேசு போதகர், ஆசிரியர் (யோவா 13:13). இரண்டு, சீடர்கள் அறியாமையில் இருந்தார்கள். ஆகவேதான் ஆசிரியர் அல்லது போதகரான இயேசு தம் சீடர்களுக்குக் கற்றுத் தருகின்றார். திருவிவிலியம், “அறியாமை அழிவுக்கு இட்டுச் செல்லும்” (ஓசே 4:6) என்கிறது. தன்னுடைய சீடர்கள் அச்சத்திலும் அறியாமையிலும் இருக்கின்றார்கள் என்பதை அறிந்த இயேசு அவர்களின் அச்சத்தைப் போக்கி, இறையாட்சிப் பற்றிக் கற்றுக்கொடுத்து, அவர்களின் அறியாமையைப் போக்குகின்றார். இயேசு தம் சீடருக்குக் கற்றுத் தரும்போது, அக்காலத்தில் வாழ்ந்த பரிசேயர்களையும் மறைநூல் அறிஞர்களையும் போன்று கற்பித்ததது ஒன்றும், வாழ்ந்தது ஒன்றுமாய் இருக்கவில்லை. மாறாக, அவர் அவர்களுக்குக் கடைப்பிடித்துக் கற்பித்து வல்ல இறைவக்கினராகத் திகழ்ந்தார் (லூக் 24:19) கற்றுத்தர அழைக்கும் இயேசு விண்ணேற்றம் அடைந்த இயேசு தன்னோடு எல்லாப் பணிகளும் முடிந்துவிட்டன என்று, அப்படியே சென்றுவிட வில்லை. மாறாகத் தான் தொடங்கிய பணி தனக்குப் பின்னும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காக, அவற்றைத் தம் சீடர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்கின்றார். இன்றைய நற்செய்தியில் விண்ணேற்றம் அடைவதற்கு முன்பாகத் தம் சீடரிடம், “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்... நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள்” என்கின்றார். இயேசு தம் சீடரிடம், “கடைப்பிடிக்குமாறு கற்பியுங்கள்” என்று சொல்கின்றார் எனில், அவர்கள் தங்கள் முன்மாதிரியான வாழ்வோடு கலந்த போதனையை மக்களுக்கு வழங்கும்போது, மக்கள் தான் கற்றுத்தந்ததைக் கடைப்பிடிப்பார்கள் என்று சொல்லாமல் சொல்கின்றார். ஒருமுறை திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவ்வாறு குறிப்பிட்டார்; “இன்றைய கால கட்டத்தில் மக்கள் வெறுமென போதித்துக் கொண்டிருப்பவருக்குச் செவி சாய்ப்பதில்லை. ஒருவேளை அவர் தான் வாழ்ந்ததைப் போதிக்கும்போது, மக்கள் அவரது போதனைக்குச் செவிசாய்க்கின்றார்கள்.” மேலுள்ள கூற்று முற்றிலும் உண்மை. மக்கள் ஒருவரின் போதனையைக் கேட்டு, அதனைக் கடைப்பிடித்து வாழவேண்டும் என்றால், அவர் தான் போதிப்பதைக் கடைப்பிடித்து வாழவேண்டும். போதித்ததை வாழாத ஒருவரின் போதனைக்கு யாரும் செவி சாய்ப்பதில்லை. இயேசு தம் சீடருக்க்க் கடைப்பிடித்துக் கற்பித்தார். அவரது சீடரும் கடைப்பிடித்துக் கற்பித்தால்தான், அது வல்லமையுள்ள போதனையாக இருக்கும். கடைப்பிடிப்போருக்குக் கிடைக்கும் கைம்மாறு விண்ணேற்றம் அடைந்த இயேசு தம் சீடரிடம் கடைப்பிடித்துக் கற்பிக்க வேண்டும், (மக்கள்) கடைப்பிடிக்குமாறு கற்பிக்க வேண்டும் என்று சொன்னார். இவ்வாறு தன்னுடைய வார்த்தையைக் கடைப்பிடிப்போருக்கு அவர் கைம்மாறு தருகின்றார் என்று என்பதை இன்றைய இறைவார்த்தை நமக்குச் சுட்டிக் காட்டத் தவற வில்லை. இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர் பெறுகின்ற முதலாவது ஆசி, அவரது பரிந்து பேசுதல். இன்றைய இரண்டாம் வாசகம், விண்ணேற்றம் அடைந்த இயேசு தந்தையின் வலப்பக்கம் வீற்றிருந்து அங்கே தந்தையிடம் பரிந்து பேசுகின்றார் என்று வாசிக்கின்றோம். எனில், தன்னுடைய கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வோருக்காக இயேசு தந்தையிடம் நிச்சயம் பரிந்து பேசுவார். இரண்டாவதாக, இயேசுவின் கட்டளையைக் கடைப்பிடிப்போர், அவர் தம் தந்தையின் மாட்சியோடு வானதூதர்களுடன் வரும்போது, உரிய கைம்மாறு பெறுவர் (மத் 16:27). விண்ணேற்றம் அடைந்த இயேசு மீண்டும் வருவார் என்று முதல் வாசகம் கூறுகின்றது. அப்படி வரும்போது, அவரது கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வோருக்கு உரிய கைம்மாறு உண்டு (உரோ 2:6). ஆகையால், நாம் இயேசு நமக்குக் கட்டளையிட்டதை மக்களுக்குக் கற்றுத் தருவோம். அதுவும் கடைப்பிடிக்குமாறு கற்றுத் தருவோம். அதன்மூலம் அவர் தரும் ஆசிகளைப் பெறுவோம். சிந்தனைக்கு ‘கற்றுத் தருவதன் உயர்ந்த நோக்கம் அறிவல்ல, செயல்” என்பார் ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்ற அறிஞர். எனவே, நாம் இயேசு நமக்குக் கற்றுத் தந்ததை கடைப்பிடித்து, அதையே மற்றவருக்குக் கடைப்பிடிக்குமாறு கற்பிப்போம். அதன்வழியாக நாம் இறையருளை நிறைவாகப் பெறுவோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|||||||||||||||||||||||||||||
Stats Counter hit counter |