maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                                பொதுக்காலம் 15ஆம் வாரம் - ஞாயிறு


முதல் வாசகம்

 

என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு.

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 7: 12-15

அந்நாள்களில்

பெத்தேலின் குருவாகிய அமட்சியா ஆமோசைப் பார்த்து, “காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு; அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே; ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம்” என்று சொன்னான்.

ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: “நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை; நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன். ஆடுகள் ஓட்டிக் கொண்டுபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, ‘என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு’ என்று அனுப்பினார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
 

பதிலுரைப் பாடல்

திபா 85: 8ab,9. 10-11. 12-13 (பல்லவி: 7) Mp3

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்.

8ab
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
9
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். - பல்லவி

 
10
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். - பல்லவி

 
12
நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.
13
நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். - பல்லவி

 

இரண்டாம் வாசகம்

உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-14

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக்கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார்.

இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந் தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். அந்த அருளை அவர் நம்மில் பெருகச் செய்து, அனைத்து ஞானத்தையும் அறிவுத் திறனையும் தந்துள்ளார். அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம். கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்கவேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள்.

கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப் பேற்றுக்கு உரியவரானோம். இவ்வாறு கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்துபாட வேண்டுமென அவர் விரும்பினார். நீங்களும், உங்களுக்கு மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை கொண்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டீர்கள். அந்தத் தூய ஆவியே நாம் மீட்படைந்து உரிமைப்பேறு பெறுவோம் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிறது. இவ்வாறு கடவுளது மாட்சியின் புகழ் விளங்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-10

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார்.

இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். அந்த அருளை அவர் நம்மில் பெருகச் செய்து, அனைத்து ஞானத்தையும் அறிவுத் திறனையும் தந்துள்ளார். அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம். கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்கவேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபே 1: 18-19 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு பன்னிருவரையும் இருவர் இருவராக அனுப்பினார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-13

அக்காலத்தில்

இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார்.

அவர்களுக்குத் தீய ஆவிகள்மீது அதிகாரமும் அளித்தார். மேலும், “பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

மேலும் அவர், “நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும்பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்று அவர்களுக்குக் கூறினார்.

அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

I ஆமோஸ் 7: 12-15
II எபேசியர் 1: 3-14
II மாற்கு 6: 7-13

அனுப்பப்படுதலும் அறிவித்தலும்


நிகழ்வு

அன்று இறையழைத்தல் ஞாயிறு என்பதால், அந்தப் பங்கின் பங்குப்பணியாளர், இறைப்பணிக்காக மக்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கும்மாறு மறையுரையில் குறிப்பிட்டார். திருப்பலி முடிந்ததும், பங்குப் பணியாளரைச் சந்திக்க அந்தப் பங்கில் இருந்த பணக்காரர் ஒருவர் வந்தார். அவர் பங்குப் பணியாளரிடம், “இன்று உங்களுடைய மறையுரையில் இறைப்பணிக்காக மக்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்குமாறு சொன்னீர்களே! இறைப்பணிக்காக – மறைப்பணிக்காகப் பண உதவி அல்லது காசோலையை அனுப்பி வைத்தால் போதாதா! பிள்ளைகளை அனுப்பி வைக்க வேண்டுமா?” என்றார்.

பணக்காரர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பங்குப்பணியாளர், அவர் பேசி முடித்ததும் அவரிடம், “மறைப்பணிக்கு பண உதவியோ அல்லது காசோலையோ அனுப்பி வைத்தால் போதாதா... பிள்ளைகளை ஏன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்கின்றீர்கள். ஒன்றை உங்கள் மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்: கடவுள் தன்னுடைய பணி இம்மண்ணுலகில் நடைபெறக் காசோலையை அனுப்பி வைக்கவில்லை. தன் ஒரே மகனான இயேசுவை அனுப்பி வைத்தார். இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும், நான் ஏன் உங்கள் பிள்ளைகள் இறைப்பணிக்காக அனுப்பி வைக்கவேண்டும் என்று” என்றார். பணக்காரரோ எதுவும் பேசமுடியாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

இறைப்பணி செய்ய மக்கள் முன்வரவேண்டும் என்ற உண்மையை உணர்த்தும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளின் அழைப்பையும், அழைக்கப்பட்டவர்கள் எப்படிப் பணிசெய்தார்கள், நாம் எப்படிப் பணி செய்யவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

கடவுள் யாரையும் தன் பணிக்காக அழைக்கலாம்

இன்று எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், பணியாளர்களைத் தகுதி பார்த்துத் தேர்ந்தெடுக்கின்றது; ஆனால், கடவுளுடைய அழைப்பைப் பொறுத்தளவில் இது முற்றிலும் நேர் எதிராக இருக்கின்றது. இந்த உலகம் மடமை அல்லது ‘தகுதியில்லாதவர்கள்’, ‘வலுவற்றவர்கள்’ என்று யாரையெல்லாம் கருதியதோ, அவர்களைக் கடவுள் தம் பணிக்கென அழைக்கின்றார் (1 கொரி 1: 27).

முதல்வாசகத்தில் ஆமோசின் அழைப்பையும், நற்செய்தியில் பன்னிரு திருத்தூதர்களின் அழைப்பையும் குறித்து வாசிக்கிறோம். இறைவாக்கினர் ஆமோஸ் காட்டு அத்திமரத் தோட்டக்காரர், ஆடுகளை ஓட்டிக்கொண்டு இருந்தவர். யூதா நாட்டைச் சார்ந்த அவரைக் கடவுள் வடநாட்டினருக்குத் தன்னுடைய வார்த்தையை அறிவிக்க அழைக்கின்றார். நற்செய்தியில், திருத்தூதர்களாக ஆண்டவர் இயேசு தேர்ந்தெடுத்த பன்னிருவரும் மிகுதியாகப் படித்தவர்கள் கிடையாது. பணக்காரர்களும் கிடையாது. அத்தகையோரை இயேசு தன் பணிக்காக அழைக்கின்றார்.

இதில் நாம் கவனிக்கவேண்டிய செய்தி என்னவெனில், கடவுள் தகுதியில்லாதவர்களைத் தன் பணிக்கென அழைத்தாலும், இறுதிவரைக்கும் அவர்களைத் தகுதியில்லாதவர்களாக வைத்திருக்கவில்லை என்பதுதான். தகுதியில்லாத பன்னிருவரைத் திருத்தூதர்களாகத் தேர்ந்தெடுத்த இயேசு, அவர்களுக்குத் தம் அதிகாரத்தைக் கொடுத்து, அவர்களைத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகின்றார். பழைய ஏற்பாட்டில் வரும் மோசே, இறைவாக்கினர் எசாயா, எரேமியா, எசேக்கியேல் ஆகியோர் இதற்கு நல்ல சான்றுகள். கடவுள் தகுதியில்லாதவர்களைத் தம் பணிக்கென அழைத்து, அவர்களைத் தகுதியுள்ளவர்களாக மாற்றக் காரணம், இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் சொல்வது போன்று, கடவுள் அவர்களைத் தம் அன்பினால் முன்குறித்து வைத்துள்ளார் என்பதால். எனவே, தம் அன்பினால் முன்குறித்து வைத்தவர்களை – அவர்கள் உலகப் பார்வைக்குத் தகுதியில்லாதவர்களாக இருந்தாலும், அழைக்கின்றார் என்பதால், அழைக்கப்பட்டவர்கள் சொல்லும் செய்தியைக் கேட்பது மிகவும் இன்றியமையாதது.

அனுப்பப்பட்டவர் வழியாகக் கிடைக்கும் ஆசியும் தண்டனையும்

ஆண்டவரால் அழைக்கப்பட்டவர் அறிவிக்கும் நற்செய்தியைக் கேட்பது மிகவும் இன்றியமையாதது என்று மேலே குறிப்பிட்டிருந்தோம். ஏனெனில், அழைக்கப்பட்டவர்கள் அறிவிக்கும் செய்தி, ஆண்டவருடைய செய்தியாக இருக்கின்றது. ஆதலால், ஒருவர் ஆண்டவரால் அழைக்கப்பட்டவர் அறிவிக்கும் நற்செய்திக்குச் செவிகொடுப்பதைப் பொறுத்தே அவருடைய உயர்வும் தாழ்வும் இருக்கின்றன என்று உறுதியாகச் சொல்லலாம்.

முதல்வாசகத்தில், ஆண்டவரால் அழைக்கப்பட்ட ஆமோஸ், வடநாட்டிச் சென்று ஆண்டவர் தன்னிடம் சொன்னது போன்று இறைவாக்கு உரைக்கின்றார். அவர் உரைத்த இரண்டு செய்திகள் மிகவும் முக்கியமானவை. ஒன்று, வேற்று தெய்வ வழிபாடு நடந்து கொண்டிருந்த பெத்தேல் அழிக்கப்படும் (ஆமோ 5: 5). இரண்டு வேற்று செய்த வழிபாட்டை ஊக்கப்படுத்திய எரொபவாம் கொல்லப்படுவான் (ஆமோ 2: 16). இந்த இரண்டு செய்திகளையும் ஆமோஸ் வடநாடான இஸ்ரயேலில் போய் அறிவிக்கின்றபொழுது, பெத்தேலில் இருந்த அமாட்சியா என்ற குரு, ஆமோஸ் அறிவித்த செய்தியைக் கேளாமல் அவரிடம், “காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்” என்கிறார்.

ஒருவேளை ஆமோஸ் அறிவித்த செய்தியைக் கேட்டு, மன்னனும் மக்களும் உண்மைக் கடவுளை வழிபட்டிருந்தால், அவர்கள்மீது அசீரியர்களின் படையெடுத்து நடக்காமலே இருந்திருக்கும்; ஆனால், அவர்கள் ஆமோஸ் அறிவித்த ஆண்டவரின் செய்தியைக் கேளாததால், அவர்கள்மீது அழிவு வந்தது. நற்செய்தியில் இயேசு பன்னிருவரிடம், எந்த ஊராவது உங்களுக்குச் செவிசாய்க்காமல் போனால், உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும் என்கிறார். இப்பகுதியை மத்தேயு நற்செய்தியில் நாம் வாசிக்கின்றபொழுது, சீடர்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்குச் சோதோம், கொமொராப் பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையைவிடக் கடுமையாக இருக்கும் (மத் 10: 15) என்று வாசிக்கின்றோம். இதன்மூலம் ஆண்டவரால் அனுப்பப்பட்டவர்கள் அறிவிக்கும் நற்செய்தியைக் கேட்பதைப் பொறுத்தே ஒருவரின் உயர்வும் தாழ்வும் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அழைக்கப்பட்டோர் கடவுளை நம்பிப் பணிசெய்யவேண்டும்

ஆண்டவரால் அனுப்பப்பட்டவர்கள் அறிவிக்கும் நற்செய்திக்கு செவிமடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைக் குறித்துச் சிந்தித்துப் பார்த்த நாம், ஆண்டவரால் அனுப்பப்பட்டவர்கள் எத்தகைய மனநிலையோடு பணிசெய்யவேண்டும் என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம்.

இயேசு திருத்தூதர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்புகின்றபொழுது, அவர்களிடம், “பயணத்திற்குக் கைத்தடி தவிர... எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம்” என்கிறார். இயேசு திருத்தூதர்களிடம் இவ்வாறு சொல்வதில் ஒரு முக்கியமான செய்தி அடங்கியிருக்கின்றது. அது என்னவெனில், அவர்கள் அறிவிக்கின்ற நற்செய்திப் பணியானது கடவுளுடைய பணி. அதனால் அவர்கள் தங்களிடம் உள்ள பணம், பொருள் ஆகியவற்றில் நம்பிக்கை வைக்காமல், ஆண்டவரில் நம்பிக்கை வைத்துப் பணி செய்யவேண்டும். அனுப்பப்பட்டவர்கள் தங்கள் சொந்த ஆற்றலில், தங்களிடம் உள்ள பணம், பொருள் ஆகியவற்றில் நம்பிக்கை வைத்துப் பணிசெய்தால், அது தோல்வியில்தான் முடியும். அதே நேரத்தில் அவர்கள் ஆண்டவரில் நம்பிக்கை வைத்துப் பணிசெய்தால், புனித பவுல் சொல்வது போன்று எதையும் செய்துவிட முடியும் (பிலி 4: 13). மேலும் தோல்விகள் வந்தாலும், துவண்டு போகாமல் பணி செய்ய முடியும்.

ஆதலால், நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரால் அவரது பணியைச் செய்யச் சிறப்பாக அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்ற உண்மையை உணர்ந்து, அவரில் நம்பிக்கை வைத்து, இறைப்பணியைச் செய்ய முன்வருவோம்.

சிந்தனை

‘பணம், புகழ், பதவி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாடுபடும் திருஅவைப் பணியாளர்கள் இறைவனின் உண்மையான பணியாளர்கள் அல்ல’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகையால், நாம் பணத்தின்மீதும் படைத்தவரும், நம்மைத் தன் பணிக்காக அழைத்தவருமான ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவர் பணி செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter