maraikal
MUM
 

இளையோர்


ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிற

முதல் வாசகம்

இறந்த இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 34a, 37-43

அந்நாள்களில் பேதுரு பேசத் தொடங்கி, "திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார்.

ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்த பின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள்.

மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக் குறித்துச் சான்று பகர்கின்றனர்" என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
 

பதிலுரைப் பாடல் திபா 118: 1-2. 16-17. 22-23 (பல்லவி: 24) Mp3
 

பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.

அல்லது

அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 2 "என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு" என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! பல்லவி

16 ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. 17 நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். பல்லவி

22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! 23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! பல்லவி


இரண்டாம் வாசகம்


 மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து அமர்ந்திருக்கிறார்.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-4

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.

இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது.

கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும்பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


அல்லது

நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாய் இருப்பீர்கள். ஆகையால், பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 6b-8

சகோதரர் சகோதரிகளே, சிறிதளவு புளிப்பு மாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? எனவே புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்துவிடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாய் இருப்பீர்கள். உண்மையில் நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள்.

ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


தொடர் பாடல்

இன்று இதைச் சொல்ல வேண்டும் அல்லது பாட வேண்டும்.

எண்கிழமை நாள்களில், விரும்பினால், சொல்லலாம்.


பாஸ்காப் பலியின் புகழ்தனையே பாடிப் புகழ்வோம் கிறிஸ்தவரே.

மாசில் இளமறி மந்தையினை மாண்பாய் மீட்டுக்கொணர்ந்தாரே; மாசறு கிறிஸ்துவும் தந்தையுடன் மாசுறு நம்மை இணைத்தாரே.

சாவும் உயிரும் தம்மிடையே புரிந்த வியத்தகு போரினிலே உயிரின் தலைவர் இறந்தாலும் உண்மையில் உயிரோடாளுகின்றார். வழியில் என்ன கண்டாய் நீ?

மரியே, எமக்கு உரைப்பாயே.

உயிரோடுள்ள கிறிஸ்து பிரான் கல்லறைதன்னைக் கண்டேனே; உயிர்த்து எழுந்த ஆண்டவரின் ஒப்பரும் மாட்சியும் கண்டேனே.

சான்று பகர்ந்த தூதரையும் போர்த்திய பரிவட்டத்தினையும் அவர்தம் தூய துகிலினையும் நேராய்க் கண்ணால் கண்டேனே.

கிறிஸ்து என்றன் நம்பிக்கை, கல்லறை நின்று உயிர்த்தாரே, இதோ, உமக்கு முன்னாலே செல்வர் கலிலேயாவிற்கே.

மரித்தோர் நின்று உண்மையிலே கிறிஸ்து உயிர்த்தது யாமறிவோம். வெற்றிகொள் வேந்தே, எம்மீது நீரே இரக்கங் கொள்வீரே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


1 கொரி 5: 7b-8b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக. அல்லேலூயா.
 

நற்செய்தி வாசகம்
இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும்.


+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-9

வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.

எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து, "ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!" என்றார்.

இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.

பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


 



I திருத்தூதர் பணிகள் 10: 34a, 37-43
II கொலோசையர் 3: 1-4
III யோவான் 20: 1-9

ஆண்டவரின் உயிர்ப்பு - புதுவாழ்வுக்கான அழைப்பு

நிகழ்வு

அரிமத்தியா ஊரைச் சார்ந்த யோசேப்பைக் குறித்துப் பாரம்பரியமாகச் சொல்லப்படுகின்ற நிகழ்வு இது. இயேசு இறந்ததும் இவர் பிலாத்திடம் சென்று, இயேசுவின் உடலைக் கேட்டு வாங்கி, தனக்கெனப் பாறையில் வெட்டியிருந்த கல்லறையில் அடக்கம் செய்தார். அப்பொழுது இவருக்குத் தெரிந்த ஒருசிலர் இவரிடம், "உங்களுக்கென வெட்டிய இந்த அழகான கல்லறையை இன்னொருவருக்குக் கொடுத்துவிட்டீரே...! நீர் ஏன் இப்படிச் செய்தீர்...?" என்று கேட்டார்கள். இதற்கு இவர், "இயேசு இந்தக் கல்லறையில் இரண்டு நாள்கள்தான் இருப்பார். மூன்றாம்தான் உயர்த்தெழுந்து விடுவார். அதனால்தான் கொடுத்தேன்" என்றார்

ஆம், இயேசு இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்று சொன்னார். அவர் சொன்னது போன்றே உயிர்த்தெழுந்தார். அதைத்தான் இன்று நாம் உயிர்ப்புப் பெருவிழாவாக நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம். இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில், இன்றைய நாளில் நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்குச் சொல்லும் செய்திகளைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

கிறிஸ்தவ நம்பிக்கைக்கும் நற்செய்தி அறிவிப்புக்கும் அர்த்தம் தரும் இயேசுவின் உயிர்ப்பு

திருத்தூதரான புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில், இவ்வாறு கூறுவார்: "கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் பறைசாட்சிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்" (1கொரி 15:14). பவுலின் இவ்வார்த்தைகள் இயேசுவின் உயிர்ப்புதான் கிறிஸ்துவ நம்பிக்கைக்கும் நற்செய்தி அறிவிப்புக்கும் அர்த்தம் தருவதாகவும் அடித்தளமாகவும் இருக்கின்றது என்று ஆணித்தரமாகச் சொல்கின்றன.

உலகில் தோன்றிய நான்கு பெரிய மதங்கள் யூதமதம், புத்தமதம், இஸ்லாம் மதம், பமற்றும் கிறிஸ்தவ மதம். இதில் யூத மதத்தைத் தோற்றுவித்த ஆபிரகாம் கி.மு.1900 ஆம் ஆண்டு இறந்தார் என்று சொல்லப்படுகின்றது. அவர் உயிர்த்தெழுந்ததாக எங்கேயும் சொல்லப்படவில்லை. அதே போன்று புத்தமதத்தைத் தோற்றுவித்த புத்தர் கி.மு.483 ஆம் ஆண்டு இறந்தார் என்று சொல்லப்படுகின்றது; அவரும் உயிர்த்தெழுந்ததாக எங்கும் குறிப்பு இல்லை. இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்த முகமது நபி கி.பி 632 ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 6 ஆம் இறந்தார் என்று சொல்லப்படுகின்றது; அவரும்கூட உயிர்த்தெழுந்தார் என்று சொல்லப்படவில்லை. ஆனால் இயேசு பாடுபட்டு, சிலுவையில் அறையப்பட்டு, இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். இதற்குச் சான்றுகளாக இருப்பவைதான் இயேசுவின் வார்த்தைகளும் வெற்றுக்கல்லறையும் சீடர்களின் சாட்சிகளும் ஆகும். அதனால் இயேசுவின் உயிர்ப்பே கிறிஸ்தவ நம்பிக்கைக்கும் நற்செய்தி அறிவிப்பும் அர்த்தம் தருவதாகவும் அடித்தளமாகவும் இருக்கின்றது என்று உறுதியாகச் சொல்லலாம்.

சீடர்கள் நடுவில் மாற்றத்தை ஏற்படுத்தும் இயேசுவின் உயிர்ப்பு

இயேசுவின் உயிர்ப்பு, சீடர்கள் நடுவில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று ஆணித்தரமாகக் கூறலாம். அதுவரைக்கும் யூதர்களுக்கு அஞ்சித் தங்களை அறைக்குள் அடைத்துகொண்டு வாழ்ந்துவந்த இயேசுவின் சீடர்கள், இயேசுவின் உயிர்ப்புப் பிறகு யூதர்களுக்கு அஞ்சாமல், ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மிகத் துணிச்சலாக எல்லாருக்கும் அறிவிக்கின்றார்கள். இதுதான் இயேசுவின் உயிர்ப்பு சீடர்கள் நடுவில் ஏற்படுத்திய மாற்றம் என்று சொல்லலாம்.

இன்று நாம் கொண்டாடக்கூடிய உயிர்ப்புப் பெருவிழா, பாஸ்கா விழா அல்லது பாஸ்கா ஞாயிறு என்றும் அழைப்படுகின்றது. வழக்கமாக யூதர்கள் அப்பம் சுடுகின்றபொழுது புளிப்பேறிய மாவில் அப்பம் சுடுவார்கள்; ஆனால், பாஸ்கா விழாவிற்கு அப்பம் சுடுகின்றபோது, புளிப்பற்ற மாவில் அப்பம் சுடுவார்கள். புளிப்பு என்பது தீமையின் அடையாளமாக இருக்கின்றது (1 கொரி 5:8). இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவும் நமக்கு உணர்த்தும் செய்தியும் இதுவாகத்தான் இருக்கின்றது. ஆம். நாம் உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக இருக்கின்றோம் என்றால், தீமை விளைவிக்கக்கூடிய வழியில் அல்லது தீய வழியில் செல்லக்கூடாது. மாறாக நல்லவராம் கடவுள் காட்டுகின்ற நல்ல வழியில் செல்லவேண்டும்.

கொலோசையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் இதைத்தான் புனித பவுல், "நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால், மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்" என்று கூறுகின்றார். ஆகவே, இயேசுவின் உயிர்ப்பு சீடர்கள் நடுவில் மாற்றத்தை ஏற்படுத்தியது போன்று, நம்முடைய வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். அந்த மாற்றம் நம்மை மேலுலகு சார்ந்தவற்றை நாடுபவர்களாக இருக்கச் செய்யவேண்டும். .

இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிகளாவோம்

இயேசுவின் உயிர்ப்பு நமக்கு விடுக்கும் மேலான அழைப்பு, நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிகளாகத் திகழவேண்டும் என்பதாகும். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், நாம் ஒவ்வொருவரும் உயிர்த்த ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை எல்லாருக்கும் அறிவித்து, அவர்களை இயேசுவின் சீடர்களாக மாற்றவேண்டும் என்பதாகும்.

நற்செய்தியில் மகதலா மரியா உயிர்த்த ஆண்டவரைக் கண்டதும், அவரைப் பற்றி சீடர்களுக்கு அறிவிக்க விரைகின்றார். முதல் வாசகத்தில் புனித பேதுரு, உயிர்த்த ஆண்டவர் இயேசுவைப் பற்றி பிற இனத்தைச் சார்ந்த கொர்னலேயுக்கு அறிவிக்கின்றார். மட்டுமல்லாமல், இயேசுவின் உயிர்ப்பு "நாங்கள் சாட்சிகள்" என்று சொல்கின்றார். அப்படியானால், நாம் ஒவ்வொருவரும் இயேசுவைப் பற்றி மக்களுக்கு அறிவித்து, அவருடைய உயிர்ப்புக்குச் சாட்சிகளாகத் திகழவேண்டும் என்பதுதான் நமக்கு முன்பாக இருக்கும் அழைப்பாக இருக்கின்றது.

தெற்குப் பசிபிக் கடலில் உள்ள நியூ ஹெப்ரிட்ஸ் தீவிலிருந்த மனித மாமிசம் சாப்பிடும் மக்களுக்கு நடுவில் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து, அவர்களைப் புதிய மனிதர்களாக மாற்றிய பெருமை ஜான். ஜி.பேட்டன் என்பவரைச் சாரும். இவர் நியூ ஹப்ரிட்ஸ் தீவுகளுக்கு நற்செய்தி அறிவிக்கச் செல்லும் முன், இவருக்கு முன்பாகச் சென்ற இரண்டு மறைப்பணியாளர்கள் அத்தீவில் இருந்த மனிதமாமிசம் சாப்பிடுபவர்களால் கொல்லப்பட்டார்கள். இதனால் அந்தத் தீவுகளுக்குச் சென்று நற்செய்தி அறிவிக்க யாரும் முன்வர வில்லை. ஜான் ஜி. பேட்டன் அந்தத் தீவுகளுக்கு நற்செய்தி அறிவிக்கப் போவதாகச் சொன்னபோது, இவருக்கு அறிமுகமான ஒருவர், அங்கு செல்லவேண்டாம். அப்படிச் சென்றால், மனித மாமிசம் சாப்பிடுபவர்களால் கொல்லப்படுவாய் என்று எச்சரித்தார்.
அதற்கு ஜான். ஜி.பேட்டன், "ஒருவேளை நான் அங்கு சென்று நற்செய்தி அறிவிக்கும்போது, அவர்கள் என்னைக் கொன்றால், அவர்களுக்கு இரையாவேன். ஒருவேளை நான் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு, அவர்கள் மனம்மாறினார்கள் என்றால், இறுதியில் எல்லாரையும் போல நான் புழுக்களுக்கு இரையாவேன்... எப்படியிருந்தாலும் நான் இறுதிநாளில் இயேசு தோன்றுபோது, மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவேன்" என்றார்.

"எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. நான் ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பேன்" என்று சொன்ன மறைப்பணியாளரான ஜான்.ஜி.பேட்டனின் துணிச்சல் நாம் எவ்வொருவரும் உரித்தாக்கிக்கொள்ளவேண்டியது. ஆகையால், நாம் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடுகின்ற இந்த வேளையில், அவருடைய உயிர்ப்புச் சாட்சிகளாகத் திகழ்ந்து, அவர்தருகின்ற அமைதியையும் அருளையும் பெறுவோம்.

சிந்தனை

"நம்முடைய துன்பத்தைத் தீர்ப்பதற்கும், நம்முடைய குழப்பங்களை நீக்குவதற்கும், நம்முடைய அச்சங்களைப் போக்குவதற்கும், நம் சுமைகளை எளிதாக்குவதற்கும், கண்ணீரைத் துடைப்பதற்கும், நம்முடைய இதயத்தின் ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதற்கும், நம்முடைய மனத்தை அமைதிப்படுத்துவதற்கும் உயிர்த்த ஆண்டவர் இயேசுவுக்கு வல்லமை இருக்கின்றது" என்பார் சி.ஹச். மேக்கின்டோஷ் என்ற எழுத்தாளர். ஆகையால், நமக்குப் புதுவாழ்வு தரும் உயிர்த்த ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை கொண்டவர்களாய், அவருடைய உயிர்ப்புக்குச் சாட்சிகளாய் வாழ்வோம். அதன்வழியாய் இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 
Free Blog Widget
Stats Counter
hit counter