பாஸ்கா ஞாயிறு
வாசகங்கள்
பாஸ்கா திருவிழிப்பு
பாஸ்கா திருவிழிப்புக்கென்று, பழைய ஏற்பாட்டிலிருந்து ஏழும் புதிய ஏற்பாட்டிலிருந்து
இரண்டும் ஆக ஒன்பது வாசகங்கள் தரப்பட்டுள்ளன. தனிப்பட்ட சூழ்நிலைகளின்
காரணமாக, இவ்வாசகங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளலாம். என்றாலும்
பழைய ஏற்பாட்டிலிருந்து மூன்று வாசகங்களாவது இருக்கவேண்டும்; ஆனால் மிக
முக்கியமான காரணங்கள் இருந்தாலும்கூட, “செங்கடலைக் கடத்தல்” பற்றிய
விடுதலைப் பயண நூல் வாசகம் (3ஆம் வாசகம்) ஒருபோதும் விடப்படலாகாது. இவற்றிற்குப்
பின் திருமுகமும், நற்செய்தி வாசகமும் வாசிக்கப்படும்.
முதல் வாசகம்
கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார்.
அவை மிகவும் நன்றாய் இருந்தன.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 1- 2: 2
தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு
உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது.
நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.
அப்பொழுது கடவுள், “ஒளி தோன்றுக!” என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி
நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப்
பிரித்தார். கடவுள் ஒளிக்குப் ‘பகல்’ என்றும் இருளுக்கு ‘இரவு’ என்றும்
பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.
அப்பொழுது கடவுள், “நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது
நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்” என்றார். கடவுள் வானத்தை உருவாக்கி
வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும்
பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் வானத்திற்கு ‘விண்ணுலகம்’ என்று
பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது.
அப்பொழுது கடவுள், “விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில்
ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள்
உலர்ந்த தரைக்கு ‘நிலம்’ என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் ‘கடல்’ என்றும்
பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள்,
“புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும்
அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்” என்றார். அது அவ்வாறே
ஆயிற்று. புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும்
மரங்களையும் அந்த அந்த இனத்தின் படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது
என்று கண்டார். மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.
அப்பொழுது கடவுள், “பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப் பதற்கும் காலங்கள்,
நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள்
தோன்றுக! அவை மண்ணுலகிற்கு ஒளி தர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்”
என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் இருபெரும் ஒளிப் பிழம்புகளை உருவாக்கினார்.
பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும்
மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார். கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர
விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்; பகலையும் இரவையும் ஆள்வதற்கும்
ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள்
அது நல்லது என்று கண்டார். மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள்
முடிந்தது.
அப்பொழுது கடவுள், “திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்று விப்பதாக!
விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!” என்றார். இவ்வாறு,
கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும்,
இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார்.
கடவுள் அது நல்லது என்று கண்டார். கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி,
“பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்”
என்றுரைத்தார். மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது.
அப்பொழுது கடவுள், “கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை
அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக” என்றார். கடவுள் காட்டு
விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும்
அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று
கண்டார்.
அப்பொழுது கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும்
உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும்,
கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும்
ஆளட்டும்” என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின்
உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை
நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள்,
வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும்
ஆளுங்கள்” என்றார். அப்பொழுது கடவுள், “மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும்
செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை
உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள்,
நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள்
அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய்
இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.
விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப்
பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில்
முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்
செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது குறுகிய வாசகம்
கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார்.
அவை மிகவும் நன்றாய் இருந்தன.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 1, 26-31b
தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தார். அப்பொழுது
கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள்
கடல் மீன்களையும், வானத்துப் பறவை களையும், கால்நடைகளையும், மண்ணுலகு
முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார். கடவுள்
தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்;
ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்;
அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள்,
நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார். அப்பொழுது
கடவுள், “மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும்
உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக்
காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும்
பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்” என்றார். அது
அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை
மிகவும் நன்றாய் இருந்தன.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 104: 1-2a. 5-6.
10,12. 13-14. 24,35c (பல்லவி: 30) Mp3
பல்லவி: ஆண்டவரே! உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப்
புதுப்பிக்கின்றீர்.
1
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை
மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்.
2a
பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர். - பல்லவி
5
நீவிர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்; அது என்றென்றும்
அசைவுறாது.
6
அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது; மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள்
நின்றது. - பல்லவி
10
பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்; அவை மலைகளிடையே
பாய்ந்தோடும்.
12
நீரூற்றுகளின் அருகில் வானத்துப் பறவைகள் கூடுகட்டிக் கொள்கின்றன; அவை
மரக்கிளைகளினின்று இன்னிசை இசைக்கின்றன. - பல்லவி
13
உம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்; உம் செயல்களின்
பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது.
14
கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர்; மானிடருக்கெனப் பயிர்வகைகளை
வளரச் செய்கின்றீர். - பல்லவி
24
ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு
செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
35c
என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு! - பல்லவி
பதிலுரைப் பாடல்
திபா 33: 4-5. 6-7. 12-13. 20,22
(பல்லவி: 5b) Mp3
பல்லவி: ஆண்டவருடைய பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
4
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு
உரியவை.
5
அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு
நிறைந்துள்ளது. - பல்லவி
6
ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால் வான்
கோள்கள் எல்லாம் உருவாயின.
7
அவர் கடல்நீரைக் குவியல்போல் சேர்த்து வைத்தார்; அந்நீரை ஆழ் நிலவறைகளில்
சேமித்து வைத்தார். - பல்லவி
12
ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச்
சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர்.
13
வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார்.
- பல்லவி
20
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
22
உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள் மீது இருப்பதாக!
- பல்லவி
இரண்டாம் வாசகம்
நம் தந்தை ஆபிரகாமின் பலி.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-18
கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும்
‘இதோ! அடியேன்’ என்றார். அவர், “உன் மகனை, நீ அன்புகூரும் உன் ஒரே மகனான
ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான்
உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிட
வேண்டும்” என்றார்.
அவ்வாறே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தமது கழுதைக்குச் சேணமிட்டு, தம்
வேலைக்காரருள் இருவரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக்கொண்டு, எரி
பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டியபின், கடவுள் தமக்குக்
குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.
மூன்றாம் நாள் ஆபிரகாம் கண்களை உயர்த்தி அந்த இடத்தைத் தூரத்திலிருந்து
பார்த்தார். உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி, “நீங்கள் கழுதையோடு
இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவ்விடம் சென்று வழிபாடு செய்தபின்
உங்களிடம் திரும்பி வருவோம்” என்றார்.
பின் ஆபிரகாம் எரிபலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை எடுத்துத் தம் மகன்
ஈசாக்கின்மீது வைத்தார். நெருப்பையும் கத்தியையும் தம் கையில் எடுத்துக்கொண்டார்.
இவ்வாறு இருவரும் சேர்ந்து சென்றனர். அப்பொழுது, ஈசாக்கு தன் தந்தையாகிய
ஆபிரகாமை நோக்கி, ‘அப்பா!’ என, அவர், ‘என்ன? மகனே!’ என்று கேட்டார்.
அதற்கு அவன், “இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான
ஆட்டுக்குட்டி எங்கே?” என்று வினவினான். அதற்கு ஆபிரகாம், “எரிபலிக்கான
ஆட்டுக்குட்டியைப் பொறுத்தமட்டில், கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே” என்றார்.
இருவரும் சேர்ந்து தொடர்ந்து நடந்தனர்.
ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர்.
அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி
வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின்மீதிருந்த விறகுக்
கட்டைகளின்மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை
நீட்டிக் கத்தியைக் கையில் எடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று
“ஆபிரகாம்! ஆபிரகாம்!” என்று கூப்பிட, அவர் “இதோ! அடியேன்” என்றார்.
அவர், “பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும்
எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன்
என்று இப்போது நான் அறிந்துகொண்டேன்” என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம்
கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடியில் கொம்பு
மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச்
சென்று அந்தக் கிடாயைப் பிடித்து தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார்.
எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு ‘யாவேயிரே’ என்று பெயரிட்டார். ஆதலால்தான்
‘மலையில் ஆண்டவர் பார்த்துக்கொள்வார்’ என்று இன்றுவரை வழங்கி வருகிறது.
ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, “ஆண்டவர்
கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப்
பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே
ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழி
மரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின்
வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால்
உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி
கூறிக்கொள்வர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது குறுகிய வாசகம்
நம் தந்தை ஆபிரகாமின் பலி.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-2, 9a, 10-13, 15-18
கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும்
‘இதோ! அடியேன்’ என்றார். அவர், “உன் மகனை, நீ அன்புகூரும் உன் ஒரே மகனான
ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான்
உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரிபலியாக அவனை நீ பலியிட
வேண்டும்” என்றார்.
ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர்.
அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி
வைத்தார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக்
கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று “ஆபிரகாம்!
ஆபிரகாம்!” என்று கூப்பிட, அவர் “இதோ! அடியேன்” என்றார். அவர்,
“பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும்
எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன்
என்று இப்போது நான் அறிந்துகொண்டேன்” என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம்
கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடியில் கொம்பு
மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச்
சென்று அந்தக் கிடாயைப் பிடித்து தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார்.
ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, “ஆண்டவர்
கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப்
பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே
ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப்
பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக்
கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து
இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்
பாடல்
திபா 16: 5,8. 9-10. 11 (பல்லவி: 1)
Mp3
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் அடைக்கலம்
புகுந்துள்ளேன்.
5
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக்
காப்பவரும் அவரே;
8
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்;
எனவே, நான் அசைவுறேன். - பல்லவி
9
என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என்
உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
10
ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்க மாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக்
காண விடமாட்டீர். - பல்லவி
11
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு
நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.
- பல்லவி
மூன்றாம் வாசகம்
இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து
சென்றனர்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 14: 15- 15:
1
அந்நாள்களில்
ஆண்டவர் மோசேயை நோக்கி, “ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச்
செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல். கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன்
கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே
உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள். நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன்.
அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும்
அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான்
மாட்சியுறுவேன். பார்வோனையும் அவன் தேர்களையும் குதிரை வீரர்கள் அனைவரையும்
வென்று நான் மாட்சியுறும்போது, ‘நானே ஆண்டவர்’ என்று எகிப்தியர் உணர்ந்து
கொள்வர்” என்றார்.
இஸ்ரயேல் அணிவகுப்புக்கு முன் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர் அவர்களுக்குப்
பின் வந்து நின்றார். மேகத்தூணும் இடம்பெயர்ந்து முன் பக்கத்திலிருந்து
அவர்களுக்குப் பின்பக்கம் வந்து நின்றுகொண்டது. அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும்
இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது. அந்த மேகம்
எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது;
இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை.
மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும்
வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார்.
நீர்த்திரள் பிரிக்கப்பட்டது. வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள
நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க, இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே
உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர்.
பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரும் அவர்களுக்குப்
பின்னால் நடுக்கடல் வரை சென்றனர். பொழுது புலரும் முன், நெருப்பும் மேகமுமான
தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய
அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார். அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை
அவர் புதைந்து போகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று.
அப்போது எகிப்தியர், “இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்றுவிடுவோம்.
ஏனெனில், ஆண்டவர் தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப்
போரிடுகிறார்” என்றனர்.
ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள்,
குதிரை வீரர் அனைவர் மேலும் திரும்பி வரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல்
நீட்டு” என்றார். மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, காலையில் விடியும்
நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பி வந்தது. அதற்கு எதிர்ப்பட
அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில்
அமிழ்த்தினார். திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரை வீரர்கள் மற்றும்
கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது.
அவர்களில் ஒருவன்கூடத் தப்பவில்லை. ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த
தரையில் நடந்து சென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச்
சுவராக நின்றது.
இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலை
அளித்தார்.
கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர். எகிப்தியருக்கு
எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது
மக்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார்
மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர்.
அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்தேத்திப் பாடிய
பாடல் வருமாறு:
பதிலுரைப்
பாடல்
விப 15: 1-2. 3-4. 5-6. 17-18
(பல்லவி: 1a)Mp3
பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில் மாட்சியுடன் வெற்றி
பெற்றார்.
1
ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றி
பெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள்
அமிழ்த்திவிட்டார்.
2
ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை
நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான்
ஏத்திப்போற்றுவேன். - பல்லவி
3
போரில் வல்லவர் ஆண்டவர்; ‘ஆண்டவர்’ என்பது அவர் பெயராம்.
4
பார்வோனின் தேர்களையும் படையையும் அவர் கடலில் தள்ளிவிட்டார்; அவனுடைய
சிறந்த படைத்தலைவர்கள் செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர். - பல்லவி
5
ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல் மூழ்கிப் போயினர்; ஆழங்கள் அவர்களை
மூடிக்கொண்டன.
6
ஆண்டவரே, உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது; ஆண்டவரே, உமது வலக்கை
பகைவரைச் சிதறடிக்கின்றது. - பல்லவி
17
ஆண்டவரே, எம் தலைவரே! நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும், உம் கைகள்
உருவாக்கிய திருத்தலமும் அமைந்துள்ள உம் உரிமைச் சொத்தான மலைக்கு
அவர்களைக் கொண்டு சென்று நிலைநாட்டினீர்.
18
ஆண்டவர் என்றென்றும் அரசாள்வார். - பல்லவி
நான்காம் வாசகம்
என்றுமுள்ள பேரன்பால் உனக்கு இரக்கம்
காட்டுவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 54:
5-14
ஆண்டவர் கூறுவது:
உன்னை உருவாக்கியவரே உன் கணவர், ‘படைகளின் ஆண்டவர்’ என்பது அவர்தம்
பெயராம். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்; ‘உலக முழுமைக்கும் கடவுள்’ என
அவர் அழைக்கப்படுகின்றார். ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன
துணைவிபோலும், தள்ளப்பட்ட இளம் மனைவி போலும் இருக்கும் உன்னை ஆண்டவர்
அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள். நொடிப்பொழுதே நான் உன்னைக்
கைவிட்டேன்; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.
பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என் முகத்தை உனக்கு மறைத்தேன்;
ஆயினும் என்றும் உள்ள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார்
ஆண்டவர்.
எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது; நோவாவின் காலத்துப்
பெருவெள்ளம் இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது என்று நான்
ஆணையிட்டேன்; அவ்வாறே உன்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும், உன்னைக்
கண்டிக்கமாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன். மலைகள் நிலை
சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை
சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம்
காட்டும் ஆண்டவர்.
துயருற்றவளே, சூறைக்காற்றால் அலைக்கழிக்கப்பட்டவளே, ஆறுதல் பெறாது
தவிப்பவளே, இதோ, மாணிக்கக் கற்களால் உன் அடித்தளத்தை அமைப்பேன், நீலக்
கற்களால் உன் நிலைக்களத்தை நிறுவுவேன். உன் கால்மாடங்களைச் சிவப்புக்
கற்களாலும், உன் வாயில்களைப் பளிங்குக் கற்களாலும் உன் மதில்கள்
அனைத்தையும் விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவேன். உன் குழந்தைகள்
அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்; உன் பிள்ளைகள் நிறைவாழ்வு
பெற்றுச் சிறப்புறுவர். நேர்மையில் நீ நீலைநாட்டப்படுவாய்;
ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்; நீ அஞ்சாதே! திகில் உன்னை
அணுகாது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்
பாடல்
திபா 30: 1,3. 4-5. 10,11a,12b (பல்லவி: 1a) Mp3
பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக்
கைதூக்கிவிட்டீர்;
1
ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக்
கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
3
ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்;
சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். - பல்லவி
4
இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து
நன்றி கூறுங்கள்.
5
அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள்
முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. - பல்லவி
10
ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத்
துணையாய் இரும்.
11a
நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;
12b
என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். -
பல்லவி
ஐந்தாம் வாசகம்
என்னிடம் வாருங்கள்; நீங்கள் வாழ்வடைவீர்கள்.
நான் உங்களுடன் ஓர் என்றும் உள்ள உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55:
1-11
ஆண்டவர் கூறுவது:
தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்;
கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள்,
வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள். உணவாக
இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத
ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச்
செவிகொடுங்கள்; நல்லுணவை உண்ணுங்கள்; கொழுத்ததை உண்டு மகிழுங்கள்.
எனக்குச் செவி கொடுங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது
நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றும் உள்ள உடன்படிக்கையைச்
செய்துகொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும்
காட்டுவேன். நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத்
தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன். இதோ, நீ அறியாத பிற இனமக்களை
அழைப்பாய்; உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு, உன்னை
அறியாத பிற இனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார்.
ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில்
இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும்,
தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம்
திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம்
கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். என்
எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல,
என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல
உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும்
மிக உயர்ந்திருக்கின்றன.
மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து,
முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும்
கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என்
வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என்
விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக
நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்
பாடல்
எசா 12: 2-3. 4bcd. 5-6 (பல்லவி:
3)Mp3
பல்லவி: மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள்.
2
இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்;
ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
3
மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து
கொள்வீர்கள். - பல்லவி
4bcd
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே
அவர்செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள்.
- பல்லவி
5
ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர்
மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக.
6
சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர்
உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். - பல்லவி
ஆண்டவரின் ஒளியில் சீர்மையை நோக்கி
நட.
இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 32- 4: 4
இஸ்ரயேலே, வாழ்வுதரும் கட்டளைகளைக் கேள்; செவிசாய்த்து ஞானத்தைக்
கற்றுக்கொள். இஸ்ரயேலே, நீ உன் பகைவரின் நாட்டில் இருப்பது ஏன்? வேற்று
நாட்டில் நீ முதுமை அடைந்து வருவது ஏன்? இறந்தவர்களோடு உன்னையே
தீட்டுப்படுத்திக் கொண்டது ஏன்? பாதாளத்திற்குச் செல்வோருடன் வைத்து
நீயும் எண்ணப்படுவது ஏன்? ஞானத்தின் ஊற்றை நீ கைவிட்டாய். கடவுளின்
வழியில் நீ நடந்திருந்தால், என்றென்றும் நீ அமைதியில்
வாழ்ந்திருப்பாய். அறிவுத்திறன் எங்கே இருக்கிறது, ஆற்றல் எங்கே
இருக்கிறது, அறிவுக்கூர்மை எங்கே இருக்கிறது எனக் கற்றுக்கொள். இதனால்
நீண்ட ஆயுளும் வாழ்வும் எங்கே உள்ளன, கண்களுக்கு ஒளியும் அமைதியும்
எங்கே உள்ளன எனவும் நீ அறிந்து கொள்வாய். ஞானத்தின் உறைவிடத்தைக்
கண்டுபிடித்தவர் யார்? அதன் கருவூலங்களுக்குள் நுழைந்தவர் யார்?
ஆனால் எல்லாம் அறிபவர் ஞானத்தை அறிகின்றார்; தம் அறிவுக்கூர்மையால்
அதைக் கண்டடைந்தார்; மண்ணுலகை எக்காலத்துக்கும் நிலைநாட்டினார்; அதைக்
கால்நடைகளால் நிரப்பினார். அவர் ஒளியை அனுப்பினார்; அதுவும் சென்றது.
அதைத் திரும்ப அழைத்தார்; அதுவும் நடுக்கத்துடன் அவருக்குப் பணிந்தது.
விண்மீன்கள் தமக்குக் குறிக்கப்பட்ட இடங்களில் நின்று ஒளிவீசி
மகிழ்ந்தன. அவர் அவற்றை அழைத்தார்; அவை, “இதோ, உள்ளோம்” என்றன;
தங்களைப் படைத்தவருக்காக மகிழ்ச்சியோடு ஒளிவீசின.
இவரே நம் கடவுள், இவருக்கு இணையானவர் எவரும் இலர். மெய்யறிவின் வழி
முழுவதும் கண்டவர் இவரே; தம் அடியார் யாக்கோபுக்கும், தாம்
அன்புகூர்ந்த மகன் இஸ்ரயேலுக்கும் மெய்யறிவை ஈந்தவரும் இவரே. அதன்
பின்னர் ஞானம் மண்ணுலகில் தோன்றிற்று; மனிதர் நடுவே குடிகொண்டது. ஞானமே
கடவுளுடைய கட்டளைகள் அடங்கிய நூல்; என்றும் நிலைக்கக்கூடிய
திருச்சட்டம். அதைக் கடைப்பிடிப்போர் அனைவரும் வாழ்வர்; அதைக்
கைவிடுவோர் உயிரிழப்பர்.
யாக்கோபே, திரும்பி வா; ஞானத்தை ஏற்றுக்கொள்; அதன் ஒளியில் சீர்மையை
நோக்கி நட. உனது மாட்சியை மற்றவருக்கு விட்டுக்கொடாதே; உன்
சிறப்புரிமைகளை வேற்று மக்களினத்தாரிடம் இழந்துவிடாதே. இஸ்ரயேலே, நாம்
பேறுபெற்றோர்; ஏனெனில் கடவுளுக்கு உகந்தது எது என்பதை நாம் அறிவோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்
பாடல்
திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: யோவா
6: 68) Mp3
பல்லவி: ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.
7
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர்அளிக்கின்றது.
ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம்
அளிக்கின்றது. - பல்லவி
8
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின்
கட்டளைகள் ஒளி மயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. - பல்லவி
9
ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும்.
ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. - பல்லவி
10
அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும்,
தேனைடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை. - பல்லவி
ஏழாம் வாசகம்
நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நான் உங்களுக்குப்
புதிய இதயத்தை அருள்வேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 36: 16-17a, 18-28
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: மானிடா! இஸ்ரயேல் மக்கள் தங்கள்
நாட்டில் வாழ்கையில் அவர்கள் தங்கள் நடத்தையாலும் செயல்களாலும் அதைத்
தீட்டுப்படுத்தினார்கள். எனவே, நான் என் சினத்தை அவர்கள்மேல்
கொட்டினேன். ஏனெனில் அவர்கள் அந்த நாட்டில் இரத்தம் சிந்தி, அதனைத்
தெய்வச் சிலைகளால் தீட்டுப்படுத்தினர். நான் அவர்களை வேற்றினத்தாரிடையே
சிதறடித்தேன். அவர்கள் நாடுகளெங்கும் சிதறுண்டு போயினர். அவர்களின் நடத்தைக்கேற்பவும்,
செயல்களுக்கேற்பவும் அவர்களுக்குத் தீர்ப்பிட்டேன். வேற்றினத்தாரிடையே
அவர்கள் எங்குச் சென்றாலும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்தினர். ஏனெனில்
அவர்களைக் குறித்து ‘இவர்கள் ஆண்டவரின் மக்களாக இருப்பினும், அவரின்
நாட்டைவிட்டுப் போகவேண்டியதாயிற்று’ என்று கூறப்பட்டது. இஸ்ரயேல்
வீட்டார் சென்ற வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரைக்
குறித்து நான் கவலை கொண்டேன். எனவே இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்: தலைவராகிய
ஆண்டவர் கூறுவது இதுவே! இஸ்ரயேல் வீட்டாரே, நான் இவ்விதம் செயலாற்றுவது
உங்களை முன்னிட்டு அல்ல. மாறாக, நீங்கள் சென்ற இடங்களில் வேற்றினத்தாரிடையே
தீட்டுப்படுத்திய என் திருப்பெயரை முன்னிட்டே இவ்விதம் செயலாற்றுகிறேன்.
நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான்
புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என்
தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து
கொள்வார்கள் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே
கூட்டிச்சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன்.
நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும்
தூய்மையாவீர்கள்; உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன்.
நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள்
புகுத்துவேன்.
உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப்
பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைக்
கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும்
செய்வேன். நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள்
வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள். நான் உங்கள் கடவுளாய்
இருப்பேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்
பாடல்
திபா 42: 2, 4abc; 43: 3, 4 (பல்லவி:
42: 1) Mp3
பல்லவி: கடவுளே! என் நெஞ்சம் கலைமான் போல உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.
42:2
என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது
நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்?
4abc
மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச்
சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப் பாடல்களும் முழங்க விழாக்கூட்டத்தில்
நடந்தேனே! - பல்லவி
43:3
உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்; அவை என்னை வழி நடத்தி, உமது
திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். - பல்லவி
4
அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய
இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து
உம்மைப் புகழ்ந்திடுவேன். - பல்லவி
இத்திருவிழிப்பின்போது திருமுழுக்கு
நடைபெறுமானால், ஐந்தாம் வாசகத்துக்குப் பின்னர் வரும் பதிலுரைப்
பாடலைப் பயன்படுத்தவும். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள திருப்பாடல்
51ஐப் பயன்படுத்தவும்.
பதிலுரைப்
பாடல்
திபா 51: 10-11, 12-13, 16-17 (பல்லவி: 10) Mp3
பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.
10
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை,
புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.
11
உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து
எடுத்துவிடாதேயும். - பல்லவி
12
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம்
தந்து என்னைத் தாங்கியருளும்.
13
அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள்
உம்மை நோக்கித் திரும்புவர். - பல்லவி
16
ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி
செலுத்தினாலும் நீர் அதில் நாட்டம் கொள்வதில்லை.
17
கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய,
குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை. - பல்லவி
திருமுகம்
இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல்
இறக்கமாட்டார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து
வாசகம் 6: 3-11
சகோதரர் சகோதரிகளே,
திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும்
அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்கு
தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சிமிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார்.
அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின்
வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம்.
அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோ மெனில், அவர் உயிர்த்தெழுந்ததுபோலவே
நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய்
இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது.
இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்துபோகும். இது நமக்குத்
தெரியும். ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ?
கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம்
கொண்டுள்ள நம்பிக்கை. இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல்
இறக்கமாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம்.
அவர் இறந்தார்; பாவத்தை ஒழிக்க ஒரே ஒரு முறை இறந்தார். இப்போது அவர்
வாழ்கிறார்; அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார். அவ்வாறே, நீங்களும் பாவ
வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்; கிறிஸ்து இயேசுவோடு இணைந்து
கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக்கொள்ளுங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்
பாடல் திபா
118: 1-2. 16ab-17. 22-23Mp3
பல்லவி: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும்
உள்ளது அவரது பேரன்பு.
2
‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!
- பல்லவி
16ab
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
17
நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை
விரித்துரைப்பேன். - பல்லவி
22
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
23
ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! - பல்லவி
நற்செய்தி
வாசகம்
இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார். உங்களுக்கு
முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 1-10
ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும்
வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய
நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து
கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன்மேல் உட்கார்ந்தார். அவருடைய
தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது.
அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.
அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, “நீங்கள் அஞ்சாதீர்கள்;
சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும்.
அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை
வைத்த இடத்தை வந்து பாருங்கள். நீங்கள் விரைந்து சென்று, ‘இறந்த அவர்
உயிருடன் எழுப்பப்பட்டார்’ எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு
முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள்
அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்” என்றார்.
அவர்களும் கல்லறையை விட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள்
அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு
அறிவிக்க ஓடினார்கள். திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து
வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி, அவர் காலடிகளைப் பற்றிக்கொண்டு, பணிந்து
நின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம்
சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள்
என்னைக் காண்பார்கள்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
|